கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த ஜே.இ.இ., மற்றும் நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இத்தேர்வு தற்போது செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.’கொரோனா பரவல் இன்னும் முடிவடையாத நிலையில் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்‘ என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாணவர்களும்,பெற்றோர்களும், முன்வைத்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ‘மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் விட முடியாது‘ எனக் கூறி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் திட்டமிட்டபடி செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 13ம் தேதியில் நீட்நுழைவுத் தேர்வும் நடைபெற உள்ளது.
ஜே.இ.இ, நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் நீட் தேர்வுக்கும் இந்த வாரம் ஹால் டிக்கெட் வெளியாகவுள்ளது. 8.6 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வையும், சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வையும், எழுதவுள்ளனர். தற்பொழுது தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதில்,
1.) மாணவர்கள் முகக்கவசம், கையுறையுடன், குடிநீர் பாட்டில் மற்றும் சானிடைசர் கொண்டு வரவேண்டும்.
2.)தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு மாணவரும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும்.
3.) மாணவர்களுக்கு புதிய முக கவசம் வழங்கப்படும். அதனை அணிந்து கொண்டு பழைய முக கவசத்தை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
4.)மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும். அதில் 99.4 பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் இருப்பவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். எனக் கூறப்பட்டுள்ளது.
இதில்,நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்களுக்கு அனுமதி உண்டா என்பது பற்றி விளக்கப்படவில்லை.